Description
குயில் பாட்டு பாரதியார்
குயில் பாட்டு பொருளடக்கம்: ஆசிரியர் பாரதியார்
- குயில்
- குயிலின் பாட்டு
- குயிலின் காதற் கதை
- காதலோ காதல்!
- குயிலும் குரங்கும்
- இருளும் ஒளியும்
- குயிலும் மாடும்
- நான்காம் நாள்
- குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்
குயில்
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய … 5
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நததத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; –
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, … 10
வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் … 15
காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல், … 20
இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே – கண்டேன் யான்.
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் … 25
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ? … 30
என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; … 35
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!
குயிலின் பாட்டு
ராகம் – சங்கராபரணம் தாளம் – ஏக தாளம்)
ஸ்வரம்: ஸகா – ரிமா – காரீ
பாபாபாபா – மாமாமாமா
ரீகா – ரிகமா – மாமா
சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்)
1. அருளே யாநல் லொளியே;
ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
இருளே, இருளே, இருளே. … (காதல்)
2. இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம். … (காதல்)
3. நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம். … (காதல்)
4. தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம், கூளம், கூளம். … (காதல்)
5. பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்.
மண்ணே, மண்ணே, மண்ணே. … (காதல்)
6. புகழே, புகழே, புகழே;
புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
இகழே, இகழே, இகழே. … (காதல்)
7. உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி. … (காதல்)
8. கூடல், கூடல், கூடல்
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல். … (காதல்)
9. குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுங்காலை,
விழலே, விழலே, விழலே. … (காதல்)
Reviews
There are no reviews yet.