Description
உள்ளே …
[contents h2 h3]
தமிழ் எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் (Tamil eluthukkal), முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும்.
தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் “வட்டெழுத்து” முறை உருவானது.

ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர்.
இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன.
1977 எம். ஜி. இராமச்சந்திரன் (MGR) ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது.
எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.
தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்
- உயிர் எழுத்து
- மெய் எழுத்து
- எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)
தமிழ் எழுத்துக்களின் விரிபு
ஒவ்வொரு பிறப்பிடமும் (எழுத்து) அவ்விடத்தைச் சார்ந்த பல்வேறு ஒலியம்களை குறிக்கும்.
தமிழ் எழுத்துக்களின் பெருகல்
- உயிர்மெய் எழுத்து
உயிர் எழுத்துக்கள்
- உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும்,
- நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.
குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
தமிழ் உயிர் எழுத்துக்கள்
எழுத்து | பெயர் | சொல் |
---|---|---|
அ | அகரம் | அம்மா |
ஆ | ஆகாரம் | ஆடு |
இ | இகரம் | இலை |
ஈ | ஈகாரம் | ஈட்டி |
உ | உகரம் | உடை |
ஊ | ஊகாரம் | ஊஞ்சல் |
எ | எகரம் | எட்டு |
ஏ | ஏகாரம் | ஏணி |
ஐ | ஐகாரம் | ஐந்து |
ஒ | ஒகரம் | ஒன்பது |
ஓ | ஓகாரம் | ஓடம் |
ஔ | ஒளகாரம் | ஒளவை |
ஆய்தம் – ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
தமிழ் மெய்யெழுத்துகள்
தமிழ் அரிச்சுவடியில் க் தொடக்கம் ன் வரையுள்ள 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாக உள்ளன.
- வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துக்கள் வல்லினத்தையும்,
- மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும்
- ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.
மெய்யெழுத்து | பகுப்பு | ||
---|---|---|---|
க் | வல்லினம் | ||
ங் | மெல்லினம் | ||
ச் | வல்லினம் | ||
ஞ் | மெல்லினம் | ||
ட் | வல்லினம் | ||
ண் | மெல்லினம் | ||
த் | வல்லினம் | ||
ந் | மெல்லினம் | ||
ப் | வல்லினம் | ||
ம் | மெல்லினம் | ||
ய் | இடையினம் | ||
ர் | இடையினம் | ||
ல் | இடையினம் | ||
வ் | இடையினம் | ||
ழ் | இடையினம் | ||
ள் | இடையினம் | ||
ற் | வல்லினம் | ||
ன் | மெல்லினம் |
உயிர்மெய் தமிழ் எழுத்துகள்
உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12×18 = 216 .
இவற்றுடன்
- 12- உயிர் எழுத்துகளும்,
- 18- மெய் எழுத்துகளும்
- ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து
மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன
கிரந்த எழுத்துக்கள்
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.
தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், ‘ஜ’, ‘ஷ’, ‘ஸ’, ‘ஹ’ ,’க்ஷ’ போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஜ் | ஜ | ஜா | ஜி | ஜீ | ஜு | ஜூ | ஜெ | ஜே | ஜை | ஜொ | ஜோ | ஜௌ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஷ் | ஷ | ஷா | ஷி | ஷீ | ஷு | ஷூ | ஷெ | ஷே | ஷை | ஷொ | ஷோ | ஷௌ |
ஸ் | ஸ | ஸா | ஸி | ஸீ | ஸு | ஸூ | ஸெ | ஸே | ஸை | ஸொ | ஸோ | ஸௌ |
ஹ் | ஹ | ஹா | ஹி | ஹீ | ஹு | ஹூ | ஹெ | ஹே | ஹை | ஹொ | ஹோ | ஹௌ |
க்ஷ் | க்ஷ | க்ஷா | க்ஷி | க்ஷீ | க்ஷு | க்ஷூ | க்ஷெ | க்ஷே | க்ஷை | க்ஷொ | க்ஷோ | க்ஷெள |
ஸ்ரீ |
தமிழ் எண்கள்
தமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, ரூபாய், இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன.
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
நாள் | மாதம் | வருடம் | செலவு | வரவு | மேலேயுள்ளபடி | ரூபாய் | இலக்கம் |
---|---|---|---|---|---|---|---|
௳ | ௴ | ௵ | ௶ | ௷ | ௸ | ௹ | ௺ |
தமிழ் மொழி வரலாறு
தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.
பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன.

இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.
2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.
தமிழி மொழியின் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
தமிழ் சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர்.
இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர்.
இவர் (கால்டுவெல் ) த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார்.
தமிழ் என்னும் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, “தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – த்ரவிட ஆகியது என்பர்.
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி “தனது மொழி” என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.
காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது “தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி” என்ற பொருள் தரவல்லது என்கிறார்.
You May Like
- 100+ சங்ககால தமிழ் பெண் பெயர்கள்
- இனிய 1000+ பெண் குழந்தை பெயர்கள் தமிழில்
- நல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள்
Reviews
There are no reviews yet.