Description
சங்கத் தமிழ் வாழ்வியல்
அறிஞர் உரை
பேராசிரியர்
முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்
சிறப்புநிலைப் பேராசிரியர்
திருக்குறள் இருக்கை
தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் செய்யுள் உலகத்தின் புருவத்தையே உயர்த்தி இருக்கிறது.இப்படி ஒரு சிந்தனையா என்று பலரையும் இன்றும் வியப்படைய வைக்கிறது இப்பனுவல். யாது நும்மூர் என்ற போது யாதும் ஊர் என்கிறது; யாவர் உறவினர் என்ற போது யாவரும் உறவினர் என்கிறது இப்பாட்டு. இப்படி இருந்து விட்டால், உலகில் காவல் நிலையங்களும், வழக்கு மன்றங்களும், படைப்பிரிவுகளும் தேவைப்படுமா?
பூங்குன்றனாருடைய பாட்டு, பேராசிரியர் அரங்க.பாரி அவர்களிடம் வேறுபட்ட ஒரு சிந்தனையை விதைத்திருக்கிறது.
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே…..
என்ற அடிகளை ஒட்டி அவர். காதல், நோதல், ஈதல், ஓதல், வாழ்தல்,சாதல் என்பவற்றைக் குறித்துக்கூறும் சங்க இலக்கிய பனுவல்களை இன்றைய வாழ்வோடும் பிணைத்து நோக்கி இவ்வரிய நூலைப் படைத்துள்ளார்.
எல்லாரும் காதல் கொண்டுவிட முடியுமா? எல்லாரும் கொள்வதும் காதலாகிவிட முடியுமா? காதலென்பது உடல் தினவாலும் பருவ மயக்கத்தாலும், வருவதன்று; அவ்வாறு வருவது மோகம்; அது முள். காதலென்பது மலர். அதனை உள்ளப்புணர்ச்சி என்றும் இயற்கைப்புணர்ச்சி என்றும் சங்க இலக்கியம் கற்பிக்கும்.
வாங்குகிற நிலத்திற்கு எல்லை கூறுவது போல வருகிற காதலுக்கும் எல்லைக் கற்பித்துப் பார்க்கிறார் சங்கப் புலவர்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே
இப்படி அளந்து கூற முடியாதிருப்பதே காதல்.
காதலர்கள் இறந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை; காதல் மறந்துபோகுமே என்றே கவலைப்படுகின்றனர்.
வீட்டில் பெண் பிறந்தால், அவள் சந்தனம், முத்து, யாழிசை என்று பிறந்த இடம் சொந்தம் கொண்டாட முடியாத உற்பத்திப் பொருளாகி விடுகிறாள். பெண்ணைப் பெற்றவரை விட இவளைப் பெற்றே ஆகவேண்டுமெனக் கருதும் காதலன், நாணம் விட்டு நடுத்தெருவில் மடலேறவும் ஒருப்படுகிறான். காதலால் மோதல் விளைகிறது; மோதலால் நோதல் ஏற்படுகிறது. இவை எல்லாம் இந்தப் பண்பாட்டுப் பெட்டகத்தில் வைர மணிகளாக விளங்குகின்றன.
ஒதலை உயர்ந்தோர்க்குரியதாகப் பேசுகிறது தொல்காப்பியம். பள்ளிக் கூட நிழலில் கால் வைக்க முடியாதவாறு ஓரங்கட்டப்பட்ட தமிழினத்தின் துயரத்தைத் தொல்காப்பியமும் பதிவு செய்து வைத்திருக்கிறது.
நெல்லிமரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதியன் நினைவு வருகிறது என்கிறது. ஈகையின் சிறப்பை எடுத்துரைக்கும் பகுதி. பயனுற எண்ணுதலையும், செய்தலையும், பிறர்க்கென வாழ்தலையும் சங்க இலக்கியம் அழகுற எடுத்தியம்புவன எல்லாம் நூற்கண் வானத்து மீன்களாகப் பொலிகின்றன.
பேராசிரியர் அரங்க. பாரி இலக்கியமும் உலகியலும் இனிது பயின்றவர்; நிருவாகத் தேரை எவ்வாறு ஒட்டுவதெனும் கலை அறிந்தவர். அவரது இந்நூல் எல்லோர்க்கும்
கு.வெ.பாலசுப்பிரமணியன்
Reviews
There are no reviews yet.