Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

இரண்டாம் பகுதி

முறையீடு 

  1. தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்

திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும்

தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த - குருமூர்த்தி

சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில்

நேர்மான நாய்கன், நிதிமிக்க - ஊர்மதிக்கும்

நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து

சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் - அன்னார்

அருளுவார்: "மெய்யன் புடையீரே, அப்பன்

திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை - உருகாதீர்!

அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத்

தின்புலால் யாகச் சிறுமைதனை - நன்றுரைத்தான்.

ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ!

தீதலால் வேறு தெரியாரோ! - சோதியான்

சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர்

உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் - மெய்யன்பீர்,

பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை

ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! - தீங்கு

வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார்

கடவுள் கருணை இதுவாம்! - வடவர்

அழிவாம் குறுநெறியா ரேனும் பழிக்குப்

பழிவாங் குதல்சைவப் பாங்குக் - கிழிவாம்.

வடநாட்டில் சைவம் வளர்ப்போம்; கொலையின்

நடமாட்டம் போகும்! நமனைக் - கெடமாட்டும்

தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை

ஆளுடையான் செம்மை அருள்வாழி! - கேளீர்

குமர குருபரன் ஞான குருவாய்

நமை யடைந்தான் நன்றிந்த நாள்!

  1. குருபரனுக் கருள்புரிந்தான்

கயிலாச புரத்தில் நல்ல

சண்முகக் கவிரா யர்க்கும்

மயில்நிகர் சிவகா மிக்கும்

வாயிலாப் பிள்ளை யாக

அயலவர் நகைக்கும் வண்ணம்

குருபரன் அவத ரித்தான்

துயரினால் செந்தூர் எய்திக்

கந்தனைத் துதித்தார் பெற்றோர்.

 

நாற்பது நாளில் வாக்கு

நல்காயேல் எங்கள் ஆவி

தோற்பது திண்ண மென்று

சொல்லியங் கிருக்கும் போது

வேற்படை முருகப் பிள்ளை

குருபரன் தூங்கும் வேளை

சாற்றும்அவ் வூமை நாவிற்

சடாட்சரம் அருளிச் சென்றான்.

  1. ஊமையின் உயர் கவிதை

அம்மையே அப்பா என்று

பெற்றோரை அவன் எழுப்பிச்

செம்மையே நடந்த தெல்லாம்

தெரிவித்தான். சிந்தை நைந்து

கைம்மையாய் வாழ்வாள் நல்ல

கணவனைப் பெற்ற தைப்போல்

நம்மையே மகிழ வைத்தான்

நடமாடும் மயிலோன் என்றார்.

 

மைந்தனாம் குருப ரன்தான்

மாலவன் மருகன் வாழும்

செந்தூரில் விசுவ ரூப

தரிசனம் செய்வா னாகிக்

கந்தரின் கலிவெண் பாவாம்

கனிச்சாறு பொழியக் கேட்ட

அந்தஊர் மக்கள் யாரும்

அதிசயக் கடலில் வீழ்ந்தார்!

 

  1. ஞானகுருவை நாடிச் சென்றான்

ஞானசற் குருவை நாடி

நற்கதி பெறுவ தென்று

தானினைந் தேதன் தந்தை

தாயார்பால் விடையும் கேட்டான்.

ஆனபெற் றோர்வ ருந்த

அவர்துயர் ஆற்றிச் சென்றான்

கால்நிழல் போற் குமார

கவியெனும் தம்பி யோடே.

 

மீனாக்ஷி யம்மன் பிள்ளைத்

தமிழ்பாட விரைந்து தம்பி

தானதைக் குறிப் பெடுக்கத்

தமிழ்வளர் மதுரை நாடிப்

போனார்கள்; போகும் போது

திருமலை நாய்க்க மன்னன்

ஆனைகொண் டெதிரில் வந்தே

குருபரன் அடியில் வீழ்ந்தான்.

  1. யானைமேல் பானைத் தேன்

"என்னையும் பொருளாய் எண்ணி

எழுதரும் அங்க யற்கண்

அன்னைஎன் கனவில் தோன்றி

அடிகள்நும் வரவும், நீவிர்

சொன்னநற் றமிழும் பற்றிச்

சொன்னதால் வந்தேன். யானை

தன்னில்நீர் எழுந்த ருள்க

தமிழுடன்" என்றான் மன்னன்.

 

தெய்விகப் பாடல் தன்னைத்

திருவரங் கேற்று தற்கே

எய்துமா றனைத்தும் மன்னன்

ஏற்பாடு செய்தான். தேவர்

துய்யநற் றமிழ்ச்சா ராயம்

துய்த்திடக் காத்தி ருந்தார்;

கையில்வாத் தியங்கள் ஏந்திக்

கந்தர்வர் கண்ணாய் நின்றார்.

  1. அவையிடைச் சிவை

அரங்கிடை அரசன் ஓர்பால்,

அறிஞர்கள் ஓர்பால் கேட்கத்

தெரிந்தவர் கலையில் வல்லோர்

செந்தமிழ் அன்பர் ஓர்பால்

இருந்தனர். அரிய ணைமேல்

இருந்தனன் குருப ரன்தான்!

வரும்சனம் தமிழ ருந்த

வட்டிக்க ஆரம் பித்தான்.

 

அப்போது கூட்டத் தின்கண்

அர்ச்சகன் பெற்ற பெண்ணாள்

சிப்பத்தைப் பிரித் தெடுத்த

சீனத்துப் பொம்மை போன்றாள்

ஒப்பியே ஓடி வந்தாள்

காற்சிலம் பொலிக்க! மன்னன்

கைப்பற்றி மடியில் வைத்தான்;

கவிதையில் அவாவை வைத்தான்.

  1. தெய்வப் பாடல்

குமரகு ருபரன் பாடல்

கூறிப்பின் பொருளும் கூறி

அமரரா தியர்வி ருப்பம்

ஆம்படி செய்தான்; மற்றோர்

அமுதப்பாட் டாரம் பித்தான்.

அப்பாட்டுக் கிப்பால் எங்கும்

சமானமொன் றிருந்த தில்லை

சாற்றுவோம் அதனைக் கேட்பீர்.

 

"தொடுக்கும் கடவுட் பழம்பாடற்

றொடையின் பயனே! நறைபழுத்த

துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்

சுவையே! அகந்தைக் கிழங்கைஅகழ்ந்

தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்

கேற்றும் விளக்கே! வளர்சிமைய

இமயப் பொருப்பில் விளையாடும்

இளமென் பிடியே! எறிதரங்கம்

உடுக்கும் புவனம் கடந்துநின்ற

ஒருவன் திருவுள் ளத்தில்அழ

கொழுக எழுதிப் பார்த்திருக்கும்

உயிரோ வியமே! மதுகரம்வாய்

மடுக்கும் குழற்கா டேந்துமிள

வஞ்சிக் கொடியே வருகவே!

மலையத் துவசன் பெற்றபெரு

வாழ்வே வருக வருகவே!"

  1. இறைவி மறைவு

என்றந்தப் பாடல் சொன்னான்

குருபரன்! சிறுமி கேட்டு

நன்றுநன் றென இசைத்தாள்;

நன்றெனத் தலை அசைத்தாள்;

இன்னொரு முறையுங் கூற

இரந்தனள்; பிறரும் கேட்கப்

பின்னையும் குருப ரன்தான்

தமிழ்க்கனி பிழியுங் காலை,

 

பாட்டுக்குப் பொருளாய் நின்ற

பராபரச் சிறுமி நெஞ்சக்

கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து

கொஞ்சினாள் அரங்கு தன்னில்.

ஏட்டினின் றெழுத்தோ டோடி

இதயத்துட் சென்ற தாலே

கூட்டத்தில் இல்லை வந்த

குழந்தையாம் தொழும் சீமட்டி!

  1. திருவடி சரணம்

முழுதுநூல் அரங்கேற் றிப்பின்

முடிமன்னன் குதிரை யானை

பழுதிலாச் சிவிகை செம்பொன்

காணிக்கை பலவும் வைத்துத்

தொழுதனன். குருப ரன்பின்

துதிநூலும் நீதி நூலும்

எழுதிய அனைத்தும் தந்தே

சின்னாட்கள் இருந்து பின்னே,

 

தம்பியை இல்லம் போக்கித்

தான்சிராப் பள்ளி யோடு

செம்மைசேர் ஆனைக் காவும்

சென்றுபின் திருவா ரூரில்

பைம்புனற் பழனத் தாரூர்

நான்மணி மாலை பாடி

நம்மைவந் தடைந்த காலை

நாமொரு கேள்வி கேட்டோம்.

 

"ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள

அளப்பருங் கரணங்கள் நான்கும்

சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்

திருந்துசாத் துவிகமே யாக

இந்துவாழ் சடையான் ஆடு மானந்த

எல்லையில் தனிப்பெருங் கூத்தின்

வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து

மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்."

 

ஆகுமித் திரு விருத்த

அனுபவப் பயனைக் கேட்க

ஈகுவோன் கையி லொன்றும்

இல்லாமை போல் தவித்துத்

தேகமும் நடுங்கி நின்று

திருவடி சரணம் என்றான்

ஏகிப்பின் வருக என்றோம்

சிதம்பரம் ஏகி உள்ளான்.

 

சென்றஅக் குருப ரன்தான்

திரும்பிவந் திடுமோர் நாளும்

இன்றுதான். சிறிது நேரம்

இருந்திடில் காணக் கூடும்.

என்றுநற் றேசி கர்தாம்

இருநாய்கண் மாருங் கேட்க

நன்றுற மொழிந்தார். கேட்ட

நாய்கன்மார் காத்தி ருந்தார்.

  1. சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்

புள்ளிருக் கும்வேளூர் போய்ப்

புனைமுத்துக் குமரன் மீது

பிள்ளைநூல் பாடி மன்றில்

பெம்மானை மும்மணிச் சொல்

தெள்ளுநீர் ஆட்டிப் பின்னும்

சிதம்பரச் செய்யுட் கோவை

அம்மைக் கிரட்டை மாலை

அருளினான் இருளொன் றில்லான்.

 

மூளும்அன் பாற் பண்டார

மும்மணிக் கோவை கொண்டு

ஆளுடை ஞானா சானின்

அடிமலர் தொழுது பாடி

நீளுறப் பரிசாய்ப் பெற்ற

நெடுநிதி அனைத்தும் வைத்து

மீளவும் தொழும் சீடன்பால்

விளம்புவான் ஞான மூர்த்தி.

 

"அப்பனே இதுகேள்! இந்த

அரும்பொருள் அனைத்தும் கொண்டு

செப்பிடும் வடநா டேகிச்

சிவதரு மங்கள் செய்க!

அப்பாங்கில் உள்ளா ரெல்லாம்

அசைவர்கள், உயிர்வ தைப்போர்;

தப்பிலாச் சைவம் சார்ந்தால்

அன்பிலே தழைத்து வாழ்வார்.

 

சைவநன் மடா லயங்கள்

தாபிக்க! கோயில் காண்க!

நைவார்க்குச் சிவபி ரானின்

நாமத்தால் உணவு நல்கும்

சைவசத் திரங்கள் காண்க!

தடாகங்கள் பூந்தோட் டங்கள்

உய்வாக உயிரின் வேந்தன்

உவப்புறச் செய்து மீள்க!"

 

என்றுதே சிகனார் சொல்லி

இனிதாக ஆசி கூறி

நன்றொரு துறவு காட்டிக்

காவியும் நல்கி, ஆங்கே

"இன்றொடு வட தேசந்தான்

எம்பிரான் இருக்கை யாகித்

தென்றமிழ் நாட்டினைப் போல்

சிறப்பெலாம் எய்த" என்றார்.

 

மறைநாய்கன் மான நாய்கன்

வாய்மூடிக் காத்தி ருந்தார்.

குறைவறு பரி சனங்கள்

கூட்டமாய்த் தொடர, அன்பால்

இறைவனாம் தேசி கன்தாள்

இறைஞ்சிய குருப ரன்தான்

பிறைசூடி தன்னைப் பாடிப்

பெருஞ் சிறப்போடு சென்றான்.

  1. இப்போதெப்படி நாய்கன்மார்கள்

தேசிகர் சரிதம் சொன்னார்

செவிசாய்த்தார் நாய்கன் மார்கள்

ஆசிகள் சொல்லக் கேட்டார்

அப்போது குருப ரன்தான்

தேசிகர் திருமுன் வந்து

சேர்ந்ததும் பார்த்தி ருந்தார்

நேசத்தால் தேசி கர்தாம்

நிகழ்த்திய அனைத்தும் கேட்டார்.

 

வடநாட்டை நோக்கிச் சென்ற

வண்ணமும் பார்த்தி ருந்தார்;

உடன்சென்று வழிய னுப்ப

ஒப்பினோர் தமையும் பார்த்தார்;

கடனாற்றத் தேசி கர்க்குக்

கைகளும் குவித்தார்; செல்ல

விடைகேட்டார். தேசி கர்தாம்

விடைதந்தார். எனினும் அந்தோ

 

அழுதிடு நாய்கன் மார்கள்

அழுதுகொண் டேமீண் டார்கள்;

எழுதிய ஓவி யங்கள்

கலைந்தன எனப் பதைத்தார்.

பழுதிலா எம்கு டும்பப்

பரம்பரை `ஆல்' இன்றோடு

விழுதொடு சாய்ந்த தென்று

விளம்பினார் உளம் பதைத்தே.

 

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.