அகத்திணைப் பாகுபாட்டினைத் தொல்காப்பியர் மிகவும் ஆழமாகப் பகுத்துக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் யார், யார் உரையாற்ற வேண்டும், என்ன செயல்கள் செய்யவேண்டும் என்பதை விளக்கியுரைத்துள்ளார். பொருளதிகாரத்தில் உள்ள அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியவற்றில், காதல் தோன்றுவது முதலாகக் காதல் வாழ்வின் அனைத்துச் செய்திகளையும் கூறிவிடுகிறார். மேலும் மெய்ப்பாட்டியலில் அகத்திணைக்கு உரிய மெய்ப்பாடுகளையும் விளக்குகிறார்; பொருளியலிலும் அகத்திணையியலிலும் சொல்லாமல் விட்ட செய்திகளை எடுத்துரைக்கிறார். சங்க இலக்கியங்கள் பெரும்பான்மையும் இத்தொல்காப்பிய அகத்திணைப் பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.