திணை எனபதற்கு ஒழுக்கம், பிரிவு என்ற பொருள்கள் உண்டு. சங்ககால தமிழகத்தில் நம் முன்னோர்கள் தாம் வாழும் நிலத்தை அடிப்படையாக கொண்டு அதனை வகைப்படுத்தினர்.
தொல்காப்பியம்
தொல்காப்பியர் தான் எழுதிய தொல்காப்பிய இலக்கண நூலினை 3 அதிகாரங்களாகப் பகுத்தார், அவை.
- எழுத்து அதிகாரம்
- சொல் அதிகாரம்
- பொருள் அதிகாரம்
தொல்காப்பியர் மற்றும் தொல்காப்பியம் பற்றி மேலும் படிக்க...
பொருள் அதிகாரம்
தொல்காப்பியர் பொருள் என்பதற்கு நம் உடைமைகளைக் குறிக்கவில்லை. மாறாக நம் வாழ்வியல் நிலைகளைக் குறிக்கின்றார். அக ஒழுக்கத்தைப் பாடும் பாடல்களில் தலைவன் மற்றும் தலைவியின் காதல் உணர்வுகளையும் அவர்களின் பேச்சுகளையும், இவை நிகழும் காலம், இடம் மற்றும் பின்னணி ஆகியவற்றையும் கொண்டு 3 பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். அவை,
- முதற்பொருள்,
- கருப்பொருள்,
- உரிப்பொருள்
முதற் பொருள்
முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும் பொழுதும் மற்றும் இவற்றை ஒட்டி அமையும் ஒழுக்கங்களாகும்.
ஐந்து வகை நிலம்
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள்.
- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
- காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை
- இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
- வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
- கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
ஆனால், தமிழக நிலப்பகுதியானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் 4 வகை நிலப்பகுதிகளை மட்டுமே கொண்டது. இங்கு பாலை என்று தனி நிலம் கிடையாது. முல்லையும், குறிஞ்சியும் கோடையின் வெப்பத்தால் திரிந்து பாலை என்னும் நிலையை அடையும் போது, இந்த பகுதிகள் பாலை நிலம் எனப்படுகின்றது. இவையே தமிழர் நிலத்திணைகள்.
இது வெறும் இயல்பின் அடிப்படையில் மட்டுமே பிரிக்கப்படாமல், நம் தமிழ் மக்களின் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.
ஐந்திணைப் பொழுதுகள்
பொழுது என்பது இந்த ஐவகை நிலத்தை சார்ந்து இருப்போருக்கு காம உணர்வினை கிளர்ந்து எழச் செய்யும் "பெரும்பொழுது" மற்றும் "சிறுபொழுது" ஆகும்.
- ஓர் ஆண்டின் 6 பருவகாலத்தைக் குறிப்பது 'பெரும்பொழுது'.
- ஒரு நாளின் 6 பிரிநிலைக் குறியீடுகளைக் குறிப்பது 'சிறுபொழுது'
சிறுபொழுது | நேரம் |
காலை | 6 முதல் 10 மணி |
நண்பகல் | 10 முதல் 14 மணி |
எற்பாடு | 14 முதல் 18 மணி |
மாலை | 18 முதல் 22 மணி |
யாமம் | 22 முதல் 2 மணி |
வைகறை | 2 முதல் 6 மணி |
பெரும்பொழுது | தமிழ்மாதப் பெயர்கள் |
இளவேனில் | சித்திரை, வைகாசி |
முதுவேனில் | ஆனி, ஆடி |
கார் | ஆவணி, புரட்டாசி |
கூதிர் (குளிர்) | ஐப்பசி, கார்த்திகை |
முன்பனி | மார்கழி, தை |
பின்பனி | மாசி, பங்குனி |
தொல்காப்பிய அடிப்படையில் திணைகளுக்குத் தரப்பட்டுள்ள பொழுதுகள்
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது | தொல்காப்பிய நூற்பா |
குறிஞ்சி | கூதிர், முன்பனி | யாமம் | 952 |
முல்லை | கார், முன்பனி | மாலை | 952 |
மருதம் | - | வைகறையாகிய விடியல் | 954 |
நெய்தல் | - | எற்பாடு (ஏற்பாடு) | 954 |
பாலை (நடுவுநிலைத் திணை) | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் | 955, 956 |
கருப்பொருள்
கருப்பொருள் என்பன அந்த அந்த திணைகளுக்கு உரிய மற்றும் அந்த பகுதியின் தெய்வம், மக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலான 14-ம் கருப்பொருள் எனப்படும்.
அகப்பொருள் பாடல்களில் இவையே (கருப்பொருள்) பின்புலமாக அமையும்.
உரிப்பொருள்
தலைவியும் தலைவனும் கூடுதல், பிரிதல், தலைவனிடம் தலைவி ஊடல் கொள்ளுதல் எதிர்பார்த்துக் காத்திருத்தல், காலம் நீடிக்கும்போது வருந்துதல், இவையே உரிப்பொருள்கள் எனப்படும்.
உரிப்பொருளாகிய இந்த வாழ்க்கை ஒழுக்கமே முப்-பொருள்களிலும் முதன்மையாகும்.
புணர்தல்(குறிஞ்சி), பிரிதல்(பாலை), இருத்தல்(முல்லை), இரங்கல்(நெய்தல்), ஊடல்(மருதம்) என்பவற்றோடு கைக்கிளை மற்றும் பெருந்திணை ஆகியவை சேர்ந்து 7-ம் அகத்திணைக்குரிய உரிப்பொருள்களாகக் கொள்ளப்படும்.
- வெட்சி
- வஞ்சி
- உழிஞை
- தும்பை
- வாகை
- காஞ்சி
- பாடாண்
ஆகிய 7-ம் புறத்திணைக்கு உரிய உரிப்பொருள்களாகும்.
உரிப்பொருள் என்பன உள்ளத்தே எழுகின்ற மன உணர்வுகளுக்கு காரணமாக விளங்கும் உந்துதல்களாகும்.
திணை | உரிப்பொருள் | விளக்கம் |
குறிஞ்சி | புணர்தலும், புணர்தல் நிமித்தமும் | ஆண் பெண் களவு |
முல்லை | (பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும் | புறப்பொருள் நிமித்தம் பிரிந்த தலைவன் வருகைக்காகத் தலைவி காத்திருத்தல் |
மருதம் | ஊடலும், ஊடல் நிமித்தமும். | வேறொருத்தியோடு வாழ்ந்த தலைவனிடம் தலைவி ஊடல் கொண்டு இருத்தல் |
நெய்தல் | இரங்கலும் இரங்கல் நிமித்தமும். | முல்லை நிலத்தில் கணவன் திரும்பி வருவது உறுதி ஆனால், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோரது நிலை அதுவன்று. எனவே மனைவி கவலைப்படுவது இங்கு இரங்கலாயிற்று. |
பாலை | பிரிதலும், பிரிதல் நிமித்தமும் | கல்வி, பொருள், போர், போன்ற காரணத்தால் தலைவன் பிரிந்து சென்றதையெண்ணி, தலைவி வாடுதலும் |
திணை
திணை என்பது ஒழுக்கம் (வாழ்க்கை முறை). திணை என்பது பால், திணை என்பது ஒரு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கான வாழ்வியல் இதை நம் தமிழர்கள் 2 வகைகளாக பிரித்தனர், அவை அகம் மற்றும் புறம்.
ஆலங்குடி வங்கனார் என்ற சங்க புலவர் பாடிய குறுந்தொகைய்ன் 45 ஆம் பாடலில் பெண் ஒருத்தி தன்னைப் பெண்திணையில் பிறந்ததாகக் குறிப்பிடுவது 'திணை' என்னும் சொல் பிரிவு (ஆண்பிரிவு, பெண்பிரிவு) என்னும் பொருளைத் தருவதாக அமைந்துள்ளது
அகத்திணை
அகத்திணை என்பது அகவொழுக்கம். ஓர் ஆண் மற்றும் பெண் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் கொண்டு வாழ்தல். இது பற்றி வெளிப்படையாக பிறறிடம் பேசமுடியாதவகைகள்.
இவையே பழந்தமிழ் இலக்கியங்களில் அகத்திணை என குறிப்பிடுகின்றன. அகத்திணை பற்றிய வாழ்வியலை மேலும் 2 பெரும் பிரிவுகளாக நம் முன்னோர்கள் பகுத்தனர். அவை,
- களவு
- கற்பு
களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாரு தம் காதலை மறைத்து பழகுதல் மற்றும் உறவுகொள்லுதல் ஆகும்.
கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை.
இதை பற்றி விரிவாக மேலும் படிக்க...
புறத்திணை
புறத்திணை என்பது புறவொழுக்கம். அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றிய செய்திகள் இங்கு கூறப்படுகின்றன. இப்புற ஒழுக்கத்தை 10 வகையாக நம் முன்னோர்கள் பிரித்தனர். அவை,
வெட்சித் திணை, கரந்தைத் திணை, வஞ்சித் திணை,காஞ்சித் திணை, உழிஞைத் திணை, நொச்சித் திணை, தும்பைத் திணை, வாகைவாகைத்திணைத் திணை, பாடாண் திணை, பொதுவியல் திணை என்பனவாகும். சிலர் கைக்கிளை, பெருந்திணை என்ற 2 அகப்பொருள் புறத்திணைகளையும் சேர்த்து கணக்கிடுவர்.
புறத்திணை பற்றி மேலும் விரிவாக படிக்க...